அழகிரி, கனிமொழி பெயர் சொல்லி மோசடிகள்!
ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் தி.மு.க., செயலாளர் கைது[1]: மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பெயரை கூறி, ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த, தி.மு.க., செயலாளர் உட்பட முன்று பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை கோகலே ரோட்டைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். பிரின்டிங் பிரஸ் வைத்துள்ள இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார்[2]. திருப்பரங்குன்றம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்தபோது, ஹார்விபட்டி தி.மு.க., செயலாளர் தங்கம் பவுன்ராஜ் அறிமுகமானார். இவரும், மாணவரணியைச் சேர்ந்த ஆனந்த், சிவா ஆகியோரும் அவ்வப்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பெயரைக்கூறி, ஜனார்த்தனிடம் பணம் பறித்தனர். இந்நிலையில், ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தனர். போலீசில் ஜனார்த்தனன் புகார் செய்தார். மூவரையும் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் கைது செய்தார்.
கனிமொழி பெயரில் மோசடி தி.மு.க.,வினர் போலீசில் புகார்[3]: வேலூரில் எம்.பி., கனிமொழி பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாக மோசடி நடந்து வருவதாக, தி.மு.க., வினர் போலீஸில் புகார் செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 2,000 ரூபாய் கட்டினால் ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்குவதாகவும், அதற்கு முதலில், “400 ரூபாய்க்கு, “டிடி’ எடுத்து அனுப்பி விண்ணப்படிவம் பெற வேண்டும்’ என, ஆற்காடு பூபதி நகரை சேர்ந்த பெண் ஒருவர் பொது மக்களிடமும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடமும் ஆசை வார்த்தை கூறி வசூல் செய்து வந்துள்ளார். இதற்கு வருமான சான்று, ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, தொழில் சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துத் தர வேண்டும். இந்த கடன் மனுவை சென்னைக்கு அனுப்பினால் மூன்று மாதம் கழித்து எம்.பி., கனிமொழி ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்குவதாக கூறி 300 பேரிடம் தலா 2,000 ரூபாய் வீதம் பூபதி நகரை சேர்ந்த பெண் வசூலித்து இருப்பதாக தி.மு.க.,வினருக்கு தகவல் வந்தது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆற்காடு நகர தி.மு.க., பொருளாளர் கோபு ஆற்காடு டவுன் போலீஸில் (நவ.,5.2010) புகார் செய்தார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இது போல நடந்துள்ள மோசடி: போலீஸார் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் முழுவதும் இது போல மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மோசடிகள் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் பலர் ஈடுபட்டு வருவதாகவும், 50 பைசா வட்டியில் ஒரு லட்ச ரூபாய் கடன் பெற 2,000 ரூபாயும், 2 லட்ச ரூபாய் கடன் பெற 4,000 ரூபாயும், சென்னைக்கு போய் வர ஒரு நபருக்கு 1,500 ரூபாய் செலவாகும் என கூறி பலரிடம் பணம் லட்ச கணக்கில் வசூலித்து இருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்[4].
கடன் பெறுவதற்காக, மகளிர் சுய உதவிக் குழுவினர் யாருக்கும் பணம் கொடுக்க தேவையில்லை[5]: “கடன் பெறுவதற்காக, மகளிர் சுய உதவிக் குழுவினர் யாருக்கும் பணம் கொடுக்க தேவையில்லை; வங்கியின் நடைமுறையை மட்டும் பின்பற்றி, கடன் பெறலாம்’ என, கலெக்டர் சமயமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பொருளாதார ரீதியாக பெண்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே, மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தி, வங்கிகள் மூலமாக கடன் வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்கள், கிராமப்பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுவினரை சந்தித்து, எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், கடன் கொடுத்து வாரந்தோறும் கடன் தொகையை வட்டியோடு வசூலித்து வருகின்றன.சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக கூறி, கடன் தொகைக்கேற்ப கமிஷன் வசூலித்து ஏமாற்றி வருகின்றனர். தொண்டு நிறுவனங்கள் பெயரில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு உடனடியாக கடன் பெற்று தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபடுகின்றன”.
இதுபோன்ற இடைத்தரகர்களிடம் ஏமாறாமல் இருக்க சில வழிமுறைகள்[6]: “சுய உதவிக் குழு ஆரம்பித்து வங்கிக்கணக்கு துவங்கியதில் இருந்து ஆறு மாதம் சிறப்பாக செயல் படக்கூடிய குழுக்கள், வங்கிகளால் கடன் பெற தகுதி உடையவையாகின்றன. இவை 12 முதல் 20 உறுப்பினர்களை கொண்டு செயல்பட வேண்டும். மாதத்தில் குறைந்தது ஒன்று அல்லது நான்கு கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும்; இதிலுள்ள உறுப்பினர்கள், மற்ற நிறுவனங்களில் உறுப்பினராக இருக்கக்கூடாது; வேறு நிறுவனங்களில் கடன் நிலுவைத் தொகை வைத்திருக்கக்கூடாது. மாத சேமிப்பு, சந்தா தொகை முழுமையாக செலுத்த வேண்டும்; குழுவில் குறைந்தபட்சம் ஐம்பது சதவீத உறுப்பினர்கள் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும்; பதிவேடுகளை முறையாக பராமரித்திருக்க வேண்டும். மேலும், தொடர் செயல்பாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களால் துவக்கப்பட்ட குழுக் களுக்கு மட்டுமே வங்கி கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, மகளிர் சுய உதவிக்குழுக்கள், கடன் இணைப்பு பெறுவதற்கு எந்த தனி நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ பணம் கொடுக்க தேவையில்லை. வங்கியின் நடைமுறையை மட்டுமே பின்பற்றி, கடன் பெறலாம். கடன் வாங்கித்தருவதாக, எந்தவொரு தனி நபரோ அல்லது தொண்டு நிறுவனங்களோ குழுக்களிடம் பணம் வசூலித்தால், அத்தகவலை உடனடியாக தெரிவிக்கலாம்”, இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்[7].
மகளிர் சுய உதவிக் குழு போர்வையில் மோசடி[8]: இப்படியெல்லாம் அறிவுறை அளித்தாலும், சுற்றறிக்கைகள் விட்டாலும் கொடுக்க வேண்டியதை கொடுக்கா விட்டால், ஒன்றும் கிடைக்காது, என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. மகளிர் குழுக்கள் பெயரில் மொத்தமாக கலக்ஸென் செய்து கொடுக்கப்படுவதால், சில இடங்களில் தான், விஷயம் வெளிவருகிறது, பல இடங்களில் அமைதியாக வேலை நடக்கிறது. முன்பு ரூ.2,000/- வெள்ள நிவாரண நிதி சில உண்மையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொடுக்கப்படாமலேயே அந்தந்த தொகுதி கவுன்சிலர்கள் அமுக்கிவிட்டனர்[9]. அப்பொழுதும் மகளிர் குழுக்கள் (அரசியல் ஆதரவற்ற) புகார் செய்தன. ஆனால், ஆளுக்கு ரூ.200/- வசூல் செய்து கொண்டு, சில இடக்களில் கொடுத்தனர், சில இடங்களில் கொடுக்காமலேயே ஏமாற்றி விட்டனர். இப்பொழுது டிவி கொடுக்கிறோம் என்று தீடீரென்று “அஞ்சுகம் மகளிர் சுய உதவிக் குழு” என்று கிளம்பியுள்ளன[10]. அதற்காகவும் வசூல் தொடங்கியுள்ளது.
வேதபிரகாஷ்
© 05-11-2010
[1] தினமலர், ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் தி.மு.க., செயலாளர் கைது, நவம்பர் 06, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=120974
[2] தினமலர், ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல், நவம்பர் 05, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=120639
[3] தினமலர்,கனிமொழி பெயரில் மோசடி தி.மு.க.,வினர் போலீசில் புகார், நவம்பர் 05,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=120826
[4] …………….., சுயஉதவி குழு உறுப்பினர் பெயரில் ரூ. 2 லட்சம் கடன் மோசடி: சேவா சங்க தலைவி கைது , செப்டம்பர் 25,2009,00:00 IST
[5] தினமலர், லஞ்சம் கொடுக்க தேவையில்லை மகளிர் குழுவினருக்கு “அட்வைஸ்‘, மே 27, 2010, http://dhinamalar.info/news_Detail.asp?Id=7502
[6] லஞ்சம் கொடுக்க தேவையில்லை மகளிர் குழுவினருக்கு “அட்வைஸ்’, மே 27, 2010, http://dhinamalar.info/news_Detail.asp?Id=7502
[7] சிகெரெட், மது, முதலியவற்றிற்கான விற்பனைக்கு இத்தகைய எச்சரிக்கைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், குடிப்பவட்கள் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோலத்தான், லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று அரசு அலுவலகங்களில் போர்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கொடுக்க வேண்டியதை கொடுக்கா விட்டால், ஒன்றும் கிடைக்காது, என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே?
[8] தினமலர், மகளிர் சுய உதவிக் குழு வங்கி கணக்கில்‘கை வைத்து‘ தொண்டு நிறுவனம் மோசடி, பிப்ரவரி 05,2010, http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15954
…………………., மதுரை மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் மோசடி செய்த வாலிபர் சென்னையில் சிக்கினார்?, செப்டம்பர் 18, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=87145
[9] சென்னையில் எங்கெங்கு தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, 3-5 அடி உயரம் தண்ணீர் வீடுகளில் புகுந்தன, என்ற விவரங்களை அரசு தாராளமாகத் தெரிந்து கொண்டிருக்கலாம், இருப்பினும் அப்படி பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு கொடுக்காமல் இருந்ததால், இப்பொழுது டிவி கொடுக்கிறேன் என்று கிளம்பியுள்ளார்கள்.
[10] தி.மு.க.வில் இளைஞரணி, மாணவரணி, இலக்கிய அணி, விவசாய அணி என பல்வேறு அமைப்புகள் உள்ளன. இதேபோல் தற்போது புதிதாக அன்னை அஞ்சுகம் மகளிர் மன்றம், தளபதி இளைஞர் நற்பணி மன்றம் என்ற 2 அமைப்புகளை சென்னையில் நாளை தொடங்குகின்றனர். தியாகராயர்நகர் பகுதி 127-வது வட்டத்தில் பாகம் வாரியாக இந்த மன்றங்கள் முதலில் திறக்கப்படுகிறது.